Monday, March 2, 2020

துக்ளக் பொன்விழா மலர்

துக்ளக் பொன்விழா மலர் ஒரு பொக்கிஷம். 312 பக்கங்கள் - துக்ளக் மற்றும் சோவைப் பற்றி எண்ணற்ற செய்திகள். துக்ளக் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை ஐம்பது ஆண்டுகளில் எப்படிப் பயணித்துள்ளது என்பதைப் பெருமளவில் அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

இரண்டு கழுதைகளைக் கொண்ட முதல் இதழ் அட்டைப்படம், 71 தேர்தல் முடிவுக்குப் பின் தம்மையே கிண்டல் செய்து கொண்டு சோ அச்சிட்ட கார்ட்டூன், நெருக்கடி நிலையை எதிர்த்து கருப்பு நிற அட்டை, 96யில் கல்யாணப் பத்திரிகையைப் போன்ற அட்டை எனப் பல்வேறு முக்கியமான அட்டைப்படங்களின் தொகுப்பு இப்புத்தகத்தின் சிறப்பு அம்சம்.



கேள்வி: தேர்தலில் நின்று ஜெயித்த அரசியல்வாதி மக்களைப் பற்றி என்ன நினைப்பார்?
பதில்: பிக்பாக்கெட் அடித்தவன், தன்னிடம் பர்ஸைப் பறிகொடுத்து விட்டு, அதையும் கூட அறியாமல் செல்லும் மனிதனைப் பார்த்து என்ன நினைப்பானோ அதைத்தான் நினைப்பார்.

மேற்கண்ட உதாரணத்தைப் போன்று 1970யிலிருந்து 2016 வரை தேதிவாரியாகச் சோவுடைய நூற்றுக்கும் அதிகமான கேள்வி பதில்கள், நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

முதல் இதழ் பற்றிய வாசகர் கருத்துகளும் எம்.ஜி.ஆரின் விமர்சனமும் சுவையாக உள்ளன.

சோ எழுதிய சில முக்கியமான தலையங்கங்கள், சில அரசியல் தலைவர்களைப் பற்றி சோவுடைய கருத்துகள் அடங்கிய கட்டுரைகள், அத்வானியின் பேட்டி, ஜெயலலிதாவின் கட்டுரை, ஜெயகாந்தனின் கட்டுரை, கருணாநிதியின் பேட்டி, மொரார்ஜியின் பேட்டி, பல சம்பவங்களைப் பற்றிய சோவின் பார்வை எனப் புத்தகம் முழுக்க பல அரிய பயனுள்ள சுவையான விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.

ஆன்மீகவாதிகள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரையாளர்கள், துக்ளக்கில் வேலை செய்பவர்கள் எனப் பலத்தரப்பட்டவர்கள் சோவைப் புகழ்ந்து எழுதிய கட்டுரைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன.

குருமூர்த்தியின் கட்டுரை சுமார் ரகம். சோ ஏன் வேறு வேறு காலக்கட்டத்தில் சில கட்சிகளை ஆதரித்தார் என்பதை நியாயப்படுத்தும் விதத்திலேயே அவருடைய கட்டுரை அமைந்துள்ளது. வெங்கையா நாயுடு, ஸ்டாலின், பன்னீர் செல்வம் ஆகியோர் கட்டுரைகளில் மையப்பொருள் இல்லை. ராமதாஸ், வீரமணி போன்றோர் நன்றாக எழுதியுள்ளனர்.

கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்குத் தொடர்ந்து சோ செய்து வந்த பொருளுதவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் ரங்கராஜன். கல்கண்டு மூலம் சோ எழுத்தாளர் ஆனதைச் சொல்கிறார் லேனா. இப்படிப் பல அரிய செய்திகளையும் நம்மால் அறிய முடிகிறது.

இந்து ராமின் நீண்ட கட்டுரை அலுப்பைத் தருகிறது. பத்மா சுப்ரமணியத்தின் கட்டுரை அருமையாக உள்ளது. சத்யா, பரக்கத் அலி ஆகியோரின் கட்டுரைகள் சோ மீது நாம் கொண்ட மரியாதையை அதிகரிக்கச் செய்கின்றன. மதலை அவசரக் கதியில் எழுதியுள்ளார் என்பது அவரது கட்டுரையின் முடிவுரையைப் படித்தால் விளங்குகிறது.

இன்னும் பல கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் எனப் பொன் விழா மலர் அட்டகாசமாக விளங்குகிறது.

Friday, February 21, 2020

பாடல் பெறும் பரந்தாமன் ஆலயங்கள்

ஆலயங்களைப் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் தமிழில் உள்ளன. ஆனால், இப்புத்தகம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

மொத்தம் 34 கோவில்களைப் பற்றிய குறிப்பு இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு கோவிலைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டும்? வரலாறு, புராணம், கல்வெட்டுச் செய்திகள், கோவிலமைப்பு, சிலைகளின் சிறப்பு, பயணம் செய்ய தேவையான இதர தகவல்கள் - இவ்வனைத்தையும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் அளவாக, ஆனால் அழகாகப்  படிப்பவர் மனங்களில் நன்றாகப் பதியுமாறு, எளிய நடையில் எடுத்துரைத்துள்ளது பத்மப்ரியா பாஸ்கரனின் திறமை.

யாருமே அறியாத கோவில்களைப் பற்றிய அரிய செய்திகளைப் பலரும் அறியும் வண்ணம் ஆராய்ந்து தொகுத்தளித்த பத்மப்ரியாவின் கடும் உழைப்பும் ஆய்வுத் திறனும் பாராட்டத் தகுந்தவை. இவர் தொகுத்தளித்த சில கோவில்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்த கோவில்கள் தாமே என்ற எண்ணத்தில் நாம் படித்தால், நாமறிந்ததாக நினைத்துக்கொண்டிருந்த இடங்களிலும் நாமறியாப் பல செய்திகள் கண்டு  நமது அகந்தை உடனே அழிந்து போகும்.

நாகலாபுரம் நாமறிந்த ஊராக இருக்கலாம். ஆனால் அங்குள்ள பதினான்கு அரிய சிலைகளை நாம் அறிந்ததுண்டா? குருவாயூரில் மோகினிக்கு ஓர் ஆலயம் இருப்பதை யாராவது இதுவரை அறிந்திருக்க முடியுமா? திருப்பட்டூர் பிரம்மனையும், பதஞ்சலியின் சமாதியையும் நாம் அறிவோம். ஆயின், அதே ஊரிலுள்ள
வ்யாக்ரபாதர் ஜீவசமாதியும், சேரமான் உலா அரங்கேறிய இடமும் யாரும் அறியாதவை. இப்படி எத்தனைச் செய்திகள் - பரந்தாமனின் பேரருள் இல்லாமல் இவையனைத்தையும் காணும் பேறும், கண்டதை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கும் பேறும் யாருக்கும் அமையாது.

ஆழ்வார்கள் பரந்தாமனைப் பாடிய காலத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய ஆனந்தத்தை அளிக்கக் கூடியவை திவாகரத் தனயனின் பாசுரங்கள். மரபுக் கவிதைகளை அவற்றின் மரபு கெடாமல், இக்காலத்தில் கொடுக்கக் கூடிய மிகச் சிலரில் இவரும் ஒருவர். தமிழை விரும்புபவர்கள் 34 கோவில்களுக்கும் இப்புத்தகத்தில் இவர் இயற்றியுள்ள பாசுரங்களைப் படித்தால் ஆனந்தக் கூத்தாடுவர்.

மொத்தம் 37 பாடல்கள் - அவற்றில் ஒன்பது பாடல்களின் வாய்ப்பாடு இதுவரை இலக்கியத்தில் இடம் பெறாதது இன்னொரு சிறப்பு. ஸ்தலங்களின் பெருமையை இரண்டு பக்கங்களுக்குள் அடக்கிப் பத்மப்ரியா சாதனை செய்துள்ளார். அவற்றை நான்கிலிருந்து எட்டடிகளுக்குள் அடக்கி அடங்காப் புகழை அடைந்துள்ளார் புலவர்.

மரபுக் கவிதைகள் ஆயினும், இக்காலத்தில் அனைவரும் பொழிப்புரை இல்லாமல் படித்து உணரும் வண்ணம், எளிய சொற்களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலவர் சொல்லாடலில் மன்னர். சுந்தரவல்லியை அழகுக்கொடி என்றும், ராமனைக் கதிர்த்தோன்றல் எனவும், திருமகளை மலராள் எனவும், ஜகந்நாதனை மேதினி நாயகன் எனவும், பிரம்மனை மாமகன் என்றும், சிவனை வாமாங்க நாதன் என்றும் புலவர் அழைப்பது சில உதாரணங்கள்.

பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கும் வண்ணம் பரமசமூட்டக்  கூடியவையாக உள்ளன. படிக்கும் நமக்கே பரந்தாமனின் மூர்த்தங்களை உடனே சென்று தரிசிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறதே. ஆனால் இதை இயற்றிய புலவர் பெரும்பாலான கோவில்களை இன்னும் காணவில்லை என்பது வியப்பை அளிக்கிறது.

வல்லினம் மிகுமிடங்கள் மிகா இடங்கள் தொடர்பான தவறுகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது பாராட்டத்தகுந்தது. அசுரனும் அரக்கனும் (ராக்ஷஸன்) வேறு; ஆனால், இப்புத்தகத்தில் சில இடங்களில் அரக்கர்களை அசுரர்களாக விளிப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துவார பாலகி என்று ஒரு கட்டுரையில் வருகிறது - தவறான சொல். ராமனா, இராமனா - இரண்டில் ஏதாவது ஒரு முறையில் எழுதுவதைப் பின்பற்றாமல் மாறி மாறி எழுதுவதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு புத்தகம் - தனித்தனி கட்டுரைகள் என எடுத்துக் கொள்ள முடியாது - அப்படியிருக்க, அனைத்துக் கட்டுரைகளும் ஒரே பாணியில் இருந்திருக்க வேண்டும். ஆயின், இரண்டு மூன்று கட்டுரைகள் ஆசிரியர் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பாணியில் மாறுபட்டு அமைந்துள்ளன.   

Sunday, January 19, 2020

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 - விமர்சனம்


தமிழ்த் திரைப்படங்களின் வரலாறு காளிதாஸிலிருந்தே அனைவரும் தொடங்குகின்றனர். ஊமைப் படக் காலத்தில் என்னென்னப் படங்கள் வந்தன, அதில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான ஆனால் தெளிவான பதில்களை இப்புத்தகம் வழங்குகிறது.

அஜயன் பாலா எழுதியுள்ள இந்நூல் தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை 1916யிலிருந்து 1947 வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகிறது. 600 பக்கப் புத்தகம், தகுந்த புகைப்படங்களுடன் விறுவிறுப்பான முறையில் எழுதப்பட்டுள்ளது. எந்தத் துறையின் வரலாறாக இருந்தாலும் சரி - இதைப் போல சுவையுடன் எழுதினால் வாசகர்கள் வரலாற்றை எளிதாகவும் விரும்பியும் படிப்பார்கள். பல வரலாற்று நூல்கள் குறிப்பெடுக்க மட்டுமே உதவுகின்றன. ஆனால் இந்நூல் புதினத்தைப் போல படித்து இன்புறவும், தேவைப்படும் போது குறிப்பெடுக்க உதவும்படியும் எழுதப்பட்டுள்ளது.

கேள்விப்படாத பல தகவல்கள் இந்த நூலில் குவிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில தகவல்கள் -
சங்கரதாஸ் நாடக உலகைத் துறந்த காரணம்...
சினிமா தோன்றிய அடுத்த வருடத்திலேயே சென்னையில் துண்டுப் படங்கள் திரையிடப்பட்ட செய்தி...
பாட்லிங் மணி - முதல் ஆக்ஷன் ஹீரோ...
மீனா நாராயணன் - முதல் பெண் ஒலிப்பதிவாளர் ...
விடிய விடிய கச்சேரி செய்த தியாகராஜ பாகவதர்...
பல்துறை வித்தகரான நடிகர் ராஜம்...
என்.எஸ்.கிருஷ்ணனின் முதல் படம்...
எம்.ஜி.ஆர். புகைப் பிடித்த ஒரே படம்...

எண்ணற்ற செய்திகள்...யாருமறியா குறிப்புகள்....துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் முழுமையான வரலாறாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை இதுவரை யாரும் இவ்வளவு விரிவாக எழுதியதில்லை. ஆசிரியர் பெரிதும் உழைத்துள்ளார் என்பது இதைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. ஈடு இணையற்ற நூல் - இந்தத் துறையில்.

பத்திக்குப் பத்துப் பிழைகளாவது இருக்கும். மொழிப் பிழைகள் எக்கச்சக்கம். சில இடங்களில் முன்பே கூறிய விஷயங்கள் திரும்பவும் விளக்கப்படுகின்றன. அரசியல் சார்ந்த சில பக்கங்கள் நூலின் ஓட்டத்துடன் ஒட்டவில்லை. சில இடங்களில் திரைப்படங்களின் வரிசைப்படுத்துதலில் தவறுகள் உள்ளன. சில விஷயங்கள் அரை குறையாகக் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எதிராகச் சதி செய்ததாக வாசன், கல்கி போன்றோரைக் காரணமின்றி குறை சொல்வது ஏற்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட குறிப்புகளுக்கு விளக்கம் தேவை என்பதை ஆசிரியர் உணரவில்லை.