Saturday, April 25, 2015

ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்" - விமர்சனம்

ரசிகர்களுக்காக தமது எழுத்தில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ளாத ஜெயகாந்தனின் நேர்மையான எழுத்து. வட்டார மொழியில் கதை எழுதுவது பிரபலமாகாத காலத்தில் சென்னை தமிழில் எழுதப்பட்ட முன்னோடி கதை. ஜெயகாந்தன் ரசிகர்களுக்கு எது பிடிக்கும் எனப் பார்த்து தமது எழுத்தை அதற்குத் தகுந்தாற் போல அமைப்பவர் இல்லை. இந்தக் கதையும் அப்படிப் பட்டதே. எல்லாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தால் என்ற ரீதியில் கதையை அறிமுகப்படுத்தாமல், ஆசிரியர் கதையை அறிமுகப் படுத்தும் விதமே மிகவும் வசீகரமாக உள்ளது. தங்கம் என்ற முக்கியமான பாத்திரம் யார், அவள் வயது என்ன, கல்யானமாணவளா, பணக்காரியா அல்லது ஏழையா, என்ன வேலை செய்கிறாள், எப்படி இருப்பாள், எங்கே வசிக்கிறாள், அவளுக்கு குழந்தை உண்டா, மகனா அல்லது மகளா என்ற அடிப்படை விஷயங்களை ஆசிரியர் முதல் சில பக்கங்களில் அறிமுகப்படுத்தும் விதம் அறிமுக எழுத்தாளர்களுக்குப் பால பாடமாக அமைக்கப் பட வேண்டும்.

இந்தக் கதாபாத்திரம் நல்லது, அது கெட்டது என வேறுபடுத்த வேண்டிய அவசியம் இக்கதையில் இல்லை. மனிதர்களின் மாறுப்பட்ட குணாசிதயங்களை அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிகளை மையமாக வைத்து புனையப் பட்ட கதை. கதையின் கட்டுமானத்தில் எந்த குறையும் சொல்ல முடியாது. இருந்தாலும் தனிப்பட்ட வகையில் எனக்கு இந்தக் கதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

சென்னை மொழியை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தாலும், மிகச் சிறிய இடங்களில் பிராமண பாஷையில் பயன்படுத்தப் படும் வார்த்தைப் பிரயோகங்கள் வருகின்றன. அது ஒரு மிகச் சிறிய குறையே.


Thursday, April 9, 2015

அனுஷா வெங்கடேஷின் "காவிரி மைந்தன்" - என் விமர்சனம்

கதை எழுதுவது சுலபமான  காரியமில்லை. நூறு பக்கங்கள் கொண்ட கதையை ஒரு மணி நேரத்தில் ஒரு வாசகன் படித்து விடக் கூடும். ஆனால் அந்த நூறு பக்கங்களைச் சுவைப்பட தருவதற்கு எழுத்தாளன் நிறைய உழைக்க  வேண்டி  இருக்கும்.

ஆயிரம் பக்கங்களுக்கு மேலான நீண்ட கதை எழுதுவது இன்னும்  கடினம். இவ்வளவு பெரிய கதையை எழுத பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் எழுத்தாளன் தனது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களின் பாதிப்பு கதையின் இயல்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவனுக்குப்   பெரிய சவால். அத்தனை பக்கக் கதையில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்வதும் சவாலே.

சரித்திர நாவல் எழுதுவது இன்னும் பெரிய சவாலான காரியம். வரலாற்றுப் பாத்திரங்களின்  இயல்பையோ வரலாற்றையோ பெரிதாக மாற்ற முடியாது. அனைவருக்கும் தெரிந்த வரலாற்றில் கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலம் சுவையாகக் கதையை நகர்த்த தெரிந்திருக்க வேண்டும்.

மேலே கூறிய அனைத்து விஷயங்களை விடவும் கடுமையான காரியம் கலை மகள் அவதாரம் எடுத்து வந்ததைப்  போல தெய்வீக காவியத்தைப் படைக்கக் கூடிய எழுத்தாளரின் கதையின் அடுத்த பாகத்தை எழுதுவது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் மேற்கண்ட அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர் கொண்டு அருமையான வரலாற்று நாவலைப்  படைத்துள்ளார். தமிழில் இதுவரை வெளியான சிறந்த பத்து சரித்திர நாவல்களில் கண்டிப்பாக இது ஒன்று. இது பெரிதாக வெகுஜன வாசகர்களைச் சென்று அடையாதது துரதிர்ஷ்டம்.

'பொன்னியின் செல்வன்' நாவலால் ஏதாவது  ஒரு வகையில் பாதிக்கப்படாதவர் தமிழ் தெரிந்தவராக இருக்க முடியாது. இந்த நூலாசிரியரும் அந்த நாவலால் கவரப்பட்டு அதன் தொடராக இந்த நாவலை எழுதியுள்ளார். பல எழுத்தாளர்களும் 'பொன்னியின் செல்வனின்' அடுத்த பாகத்தை எழுதியுள்ளனர். இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் பொன்னியின் செல்வனின் கதைக்கு உகந்தவாறு கதை அமைந்துள்ளது. தொடர்ச்சி என்ற பெயரில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மாறுபாடான கதையை சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். இக்கதாசிரியர் அந்த தவறைச் செய்யவில்லை.

'பொன்னியின் செல்வன்' வெற்றிக்கு முக்கியமான காரணம் அதில் நகைச்சுவை, வீரம், காதல், பக்தி, வரலாறு, கற்பனை, புவியியல் எல்லாமே சரியான அளவில் கலந்து சுவையான கதையாக உருவாகியிருக்கும். 'காவிரியின்  மைந்தன்' கதையும் இந்த அம்சங்களை எல்லாம் தன்னுள் கொண்டுள்ளது.

தெரிந்த வரலாறு; அருள் மொழி வர்மர் என்ற ராஜா ராஜ சோழன் உயிரோடு இருந்து இந்த தென்னாட்டை ஒரு குடையின் கீழ் ஆளப் போகிறான் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரியும். ஆயினும், கடற் கொள்ளையர்களை வல்லவராயன் மற்றும் பத்து வணிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி எதிர்க்க போகிறார்? அவருக்கு ஏதாவது  நேர்ந்து விடுமா என்று நமக்கு ஏற்படும் பரபரப்பு ஆசிரியரின் வெற்றி.

 மாறன் லோகா காதல்  நயமாக வும், நாகரீகமாகவும், சுவையாகவும் அமைந்துள்ளது. அவர்களிடையே காதல் முளைக்கும் விதமும், அவர்களிடையே அமையும் சம்பாஷனைகளும் காவியச் சுவை உடையவை. லோகா எதிர் காலத்தில் அருள் மொழி வர்மரை மணப்பாள் என்ற வரலாறு நமக்குத் தெரிந்தாலும் மாறன்-லோகா காதல் வெற்றியடைய வேண்டும் என நமக்குத் தோன்றுவது கதாசிரியரின் மாபெரும் வெற்றி.

ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பாகப் போகும் கதை - ஆனால் ஓரிடத்திலும் பரபரப்பு திணிக்கப்படவில்லை.

எவ்வளவு நாள், எத்தனை நேரம் போன்ற தவறான சொற்றொடர்கள், சில அச்சுப் பிழைகள், பார்த்திபேந்திர பல்லவனைச் சுத்தமாக மறந்து விடுவது, " காவிரி மைந்தன்'" என்ற பெரிதும் கவராத தலைப்பு, சில
சம்பாஷனைகளில் ஒருமை-பன்மை குழப்பங்கள்,  சோழர் காலத்தில்  வாழும் கதாபாத்திரம் 'இந்து மதம்' எனக் குறிப்பிடுவது போன்ற சில குறைகளும் உண்டு.

Friday, March 6, 2015

விக்ரமனின் 'நந்திபுரத்து நாயகி' - என் விமர்சனம்

தமிழில் உள்ள பெரும்பாலான சரித்திர நாவலாசிரியர்களிடம் ஏதாவது ஒரு வகையில் கல்கி மற்றும் அவருடைய 'பொன்னியின் செல்வனின்' பாதிப்பு இருக்கும். அந்த மகா உன்னதமான நாவலில் வேண்டுமென்றே பல ரகசியங்களை வெளிப்படுத்தாமல் முடித்திருப்பார் கல்கி. இதன் காரணமாக சில ஆசிரியர்கள் அந்த நாவலின் தொடர்ச்சியை தனி நாவலாக எழுதியுள்ளனர். இந்த நாவலும் அந்த வகையைச் சேர்ந்தது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சிதான் 'நந்திபுரத்து நாயகி'.

இந்த ஆசிரியர் கவிஞரும் கூட. அதனால் கதையின் பல பகுதிகள் கவிதை நடையில் உள்ளன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் கவிதை நடையும் அனாவசிய உவமை நடையும் கதையின் வேகத்தைத் தடைப்படுத்துகின்றன. இந்த கதையை இன்னும் சுருங்கச் சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்து. பல பக்கங்களை ஆசிரியர் வீணடித்து விட்டார்.

இவ்வளவு நீண்ட கதை எழுத பல மாதங்களோ சில வருடங்களோ கண்டிப்பாக ஆகியிருக்கும். அதனால் தானோ என்னவோ கதையின் நடையில் போக்கு சீராக அமையவில்லை. சுமாராக தொடங்கும் நாவல் விறுவிறுப்பாக மாறி மீண்டும் சுமாராகப் பயணித்து சப்பென முடிகிறது. அதுவும் முதல் 70-80 பக்கங்களில் கதையை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலம் தெரியப்படுத்துவது கதையின் பலவீனம்.

கதையில் பல பாத்திரங்கள். வாசகர்கள் குழம்பினால் தவறில்லை; ஆனால் கதாசிரியரே பாத்திரங்களின் உறவு முறைகளில் குழம்பிவிடுகிரார். மதுராந்தக சோழனுடைய மகனான் மதுரன் அக்காள் முறையான குந்தவையை அத்தை என்று விளிக்கிறான். தன்னுடைய சிற்றன்னையின் தங்கையை காதலிக்கிறான். ஆசிரியர் ஏன் இப்படி கோட்டைவிடுகிறார்?

நமது நாட்டுக்கு யாரால் இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது? எப்போது? இந்த கதைப்படி சோழர்கள் காலத்திலேயே 'வட இந்தியா' என்று குறிப்பிட்டார்களாம். சரியான பிதற்றல். பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரையாவது வரைந்து விட்டு இக்கதையை ஆசிரியர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த நாவலைப் படிக்காமால் இதைப் படித்தால் சில கதா பாத்திரங்கள் மற்றும் வசனங்கள் புரிய வாய்ப்பில்லை.

யார் நந்திபுரத்து நாயகி? இக்கதைப்படி குந்தவை. அவளா கதாநாயகி? இல்லை - இன்பவல்லி என்ற கற்பனைப் பாத்திரம். பின் ஏன் இந்தத் தலைப்பு? ஆசிரியருக்கே வெளிச்சம். போதாத குறைக்கு தலைப்புக்கு நியாயம் சேர்க்கவோ என்னவோ, பழையாறையை நந்திபுரம் என்ற பெயரில் பலர் தேவையின்றி  குறிப்பிடுகின்றனர். அனாவசியமாக சில சம்பவங்கள் அந்த நகரில் நடக்குமாறு ஆசிரியர் பார்த்துக் கொள்கிறார்.

பல சம்பவங்கள் நம்ப முடியாதவை. அநிருத்த பிரம்மராயரின் மாறுவேடத்தை பெரிய மர்மம் போல கடைசி வரை கொண்டு செல்வதும் அதை வாசகர்கள் யாரும் பிரம்மராயர் என்று ஊகித்திருக்கமாட்டார்கள் என்று ஆசிரியர் நம்புவது பெரிய நகைச்சுவை.

மேலும், ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட சில விஷயங்களை அப்படியே அம்போ என்று விட்டு விடுகிறார். யாரந்த கலைப்பித்து பிடித்து அலையும் கிழவர்? வாசகர்கள் சுலபமாக  ஊகித்திருப்பர். ஆனால் ஆசிரியர் கடமை தான் உருவாக்கிய மர்மத்தை கடைசியிலாவது உடைப்பது இல்லையா? நந்தினி கதாபாத்திரமும் அவளுடைய வளர்ப்பு மகன் பாண்டியன், அவனுடைய காதலி சேர மன்னன் மகள் போன்ற பல கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காரணமின்றி காணாமல் போய் விடுகின்றன.

மொத்தத்தில் நல்ல தமிழ் தெரிந்த ஆனால் கதையை சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியரால் படைக்கப்பட்ட கதை இது.

இரண்டாவது காதல் கதை by சுஜாதா - விமர்சனம்

ஹைக்கூ எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி போன்ற புத்தகங்களை எழுதியவர் சுஜாதா. நாவல் எழுதுவது எப்படி என்று புத்தகம் ஏதாவது எழுதியுள்ளாரா என்று  தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்தப் புத்தகத்தை அவரையே படித்துவிட்டு வரச் சொல்லலாம், அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால்.

ஓர் அறிமுக எழுத்தாளனின் முதல் நாவலைப் போல உள்ளதே தவிர, இது சுஜாதாவின் கதை போல தோன்ற வில்லை. ஏன் இப்படி உப்புச் சப்பில்லாத கதைக்கு சுமார் 280 பக்கங்கள் வீணடிக்க வேண்டும் எனத் தோன்ற வில்லை.

பொதுவாக சுஜாதா கதைகளில் டெக்னிகல் தவறுகள் இருக்காது. ஆனால் இக்கதையில் அப்படிப்பட்ட தவறுகள்  உள்ளன. உயிரோட்டமில்லாத கதா பாத்திரங்கள், சுவாரசியமில்லாத நிகழ்வுகள் - மொத்தத்தில் சுஜாதாவின் மோசமான கதைகளில் இதுவும் ஒன்று.